காஞ்சிபுரம், ஜன.8: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஒரே ஆண்டில் விதிமீறி இயங்கிய 1,550 வாகனங்களுக்கு ரூ.1.63 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவுபடி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் ஓட்டுநர் உரிமம், அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, தார்பாலின், மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாத வாகனங்கள் என கடந்த ஆண்டு மட்டும் விதியை மீறி இயக்கிய 1,550 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களுக்கு வரி, வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என கடந்த ஆண்டில் ரூ.1.63 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனம், அதிகளவில் பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் எச்சரித்துள்ளார்.
