புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற ₹15 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

கடலூர், மார்ச் 22: புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள 280 மதுபாட்டில் பெட்டிகளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர், வடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு ஒரு கண்டெய்னர் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசார் மூலம், மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான போலீசார், கடலூர் மஞ்சக்குப்பம் அருகே ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது மீன்களை ஏற்றி செல்லும் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அவற்றில் மீன்கள் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த போலீசார், அந்த பெட்டிகளை இறக்கி வைத்து, உள்ளே பார்த்த போது அந்த லாரியின் உள்ளே ஏராளமான மதுபாட்டில் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியையும், லாரியை ஓட்டி வந்தவர்களையும் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த லாரியில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்த பகலவன் (48) மற்றும் நேபாளத்தை சேர்ந்த தேப் கத்தி மகன் கத்திரி (30) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. மதுபானங்கள் விற்கப்படும் ஒரு கடையில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கையை போன்று 280 பெட்டிகள் இருந்தது. லாரி மற்றும் மது பாட்டில்கள் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: