கோவை, மார்ச் 20: ஒன்றிய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நேரு யுவகேந்திரா சங்கதன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்’, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மார்ச் 14-ம் தேதி தொடங்கி, மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் பீஹார், சத்திஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பங்கேற்றுள்ளனர்.
இம்முகாமின் ஒரு பகுதியாக, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். அண்ணாதுரை ஆலோசனையின்பேரில், 4 மாநில பழங்குடியின மாணவர்கள் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தெடுத்து பல்வேறு சேவைகளை செய்து வரும், கொண்டனூர் பழங்குடியின கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.