ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் தூண்கள் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. அந்த வகையில் வெம்பக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
செவல்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.