விழுப்புரம், பிப். 24: விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி கூட்டத்தில் இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்ததை, ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு நிகழ்ச்சியா? அரசியல் நிகழ்ச்சியா என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு கூட்டம் தலைவர் தங்க சேகர் தலைமையில் நடந்தது. பொதுமேலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் தனுசு, வழக்கறிஞர் செந்தில், பாஸ்கரன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசிப்பது. உறுப்பினர்களின் பங்குத்தொகை வழங்கியதை மற்றும் வழங்க வேண்டியது குறித்து முடிவெடுப்பது. வங்கியில் பெறப்பட்ட வைப்புதாரர் மற்றும் கடன்தாரர்கள் இறந்ததையொட்டி வாரிசுதாரர்களுக்கு இதனை வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிதாக அடமான கடன், தனிநபர் கடன் விண்ணப்பங்களை அனுமதித்தல். உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.