சிதம்பரம், செப். 29: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையான 6 பேர் கொண்ட குழுவினர், நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி முதல் 18 நாட்கள் நகை சரிபார்ப்பு ஆய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று 19வது நாளாக நகை சரிபார்ப்பு ஆய்வு பணி நடந்தது. இதுவரை 2005ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1955ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு மனு கொடுத்துள்ளதாகவும், அதன்படி மீண்டும் அடுத்த கட்ட நகை ஆய்வுப் பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.