விருத்தாசலம், செப். 28: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் ராஜிவ்காந்தி நகரில் பழமை வாய்ந்த நாககன்னி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் கேட்டில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உள்ளே சென்று பார்த்த போது, கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து காணிக்கை பணம் அனைத்தும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.