சிவகங்கை மாவட்டத்தில் நாளை லோக் அதாலத்

சிவகங்கை, ஜூன் 25: சிவகங்கை மாவட்டத்தில் நாளை லோக் அதாலத் நடக்க உள்ளது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நாளை லோக் அதாலத் நடக்க உள்ளது.

இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தொழிலாளர் பிரச்சினை மற்றும் குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் உள்ளிட்ட 1064 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட உள்ளன.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை மூலம் சம்பந்தப்பட்டவர்கள் எந்த வற்புறுத்தலுமின்றி வழக்குகளை சமரசமாக முடித்துக்கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு செல்வதால் ஏற்படும் கால விரயம், பணச்செலவு உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாகவும் சுமூகமாகவும் முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: