வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி

கடலூர், ஜூன் 14: கடலூரில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆதார கார்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டம் ஆயிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த உத்திரமூர்த்தி மனைவி மாற்றுத்திறனாளியான சுரேஷா குடும்பத்துடன் அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்ததாக ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினார். மனுவில் கூறியிருப்பதாவது: மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். பிள்ளைகளும், இதய அறுவை சிகிச்சை செய்து உள்ள கணவரும் உள்ளனர். நாங்கள் குடியிருக்க வீடு வேண்டி கடந்த 3 ஆண்டுகளாக மனு கொடுத்துள்ளோம். கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் மனுவை பரிசீலித்து பசுமை வீடு வழங்க குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவை பெற்றுக்கொண்டு வீட்டின் அடித்தளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பினர் கட்ட சொன்னார்கள்.

இதை நம்பி வீட்டின் கட்டுமான பணியை வட்டிக்கு பணம் வாங்கி துவங்கினோம். இதற்கிடையே ஊராட்சி செயலர் ஆட்சியரிடம் மனு வழங்கி வீடு கட்டும் திட்டத்தில் பயன் அடைந்து விடுவீர்களா என ஆவேசத்துடன் கூறி திட்டத்தை முடக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் அடித்தளத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் வீடு கட்டும் திட்டம் குறிப்பிட்ட காரணங்களுக்காக எங்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்தார். பொய்யான காரணத்தை காட்டி வீடு கட்டும் திட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய வீட்டின் சான்றிதழ் மற்றும் அடிப்படை ஆதாரங்களை வழங்கியும் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் எங்களுக்கு வசிப்பதற்கு வீடு வழங்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியர் நேரடியாக வீடு வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இந்நிலையில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்து மனு மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: