ஈரோடு, ஜூன் 9: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 6 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று ஈரோடு மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.ஹரியானா மாநிலம் சோனிபேட்டில் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது. இதில், ஈரோடு சின்னியம்பாளையத்தில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளையில் சிலம்பாட்ட பயிற்சி பெற்று வந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். சுருள் வாள் பிரிவில் ஆகாஷ், ஷாம் மேத்யூ, திவிஷா, லவகிரிஸ் ஆகியோரும், ஒற்றை கொம்பு தனித்திறன் போட்டியில் வைஷ்ணவி, சருமன் ஆகிய 6 பேர் தங்க பதக்கமும், ஒற்றை கொம்பு தனித்திறன் போட்டியில் ஹரி பிரணவ், வைசாலி, சரண்யா ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். தேசிய அளவிலான போட்டியில் 6 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று, நேற்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்த அவர்களுக்கு பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.