கீழக்கரை பகுதியில் அரபு நாட்டு உணவுகளுக்கு மவுசு அதிகரிப்பு

கீழக்கரை, ஜூன் 8: கீழக்கரை என்றாலே பிரியாணியும். தொதலும் தான் நினைவுக்கு வரும். கீழக்கரை பிரியாணி சாப்பிடுவதற்காகவே வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கீழக்கரைக்கு வந்து வாங்கி செல்கிறார்கள். மேலும் இதற்கு என்றே விருந்தினர்கள் கீழக்கரை வருவதும் உண்டு. கீழக்கரையில் தற்போது பிரியாணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு அரபு நாட்டின் உணவுகளான மந்தி,கப்சா போன்ற அரபு நாட்டு உணவு வகைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வந்தனர். விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய அவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக திரும்பிச் செல்ல முடியாத காரணத்தால் இந்த நாட்களை வீணடிக்க விரும்பாமல் அரபு நாட்டு உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தினந்தோறும் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வாட்ஸ்அப் குரூப் மூலம் வெளிப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.இது பிரியாணி போன்று இல்லாமல் மசாலா வகைகள் பயன்படுத்தாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றில் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உணவு கீழக்கரையில் தொடங்கப்பட்டு தற்போது ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் பல ஊர்களில் பரவியுள்ளது. இப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது. மேலும் தேவையானவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று உணவுகளை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரபு நாட்டு உணவு வகைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், உள்ளூரிலேயே வியாபாரம் செய்து நிம்மதியுடன் இருந்து வருவதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

Related Stories: