காட்டுமன்னார்கோவில், ஜூன் 7: காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறகிழந்தநல்லூர் கிராமத்தில் ஆண் குரங்கு ஒன்று இருந்து வந்தது. கிராம மக்களுக்கு எந்த இடையூறும் கொடுக்கவில்லை என்பதால் அந்த குரங்கிற்கு பொதுமக்கள் பாசத்துடன் உணவு அளித்து வந்தனர். வயது மூப்பினால் அவதிப்பட்டு வந்த அந்த குரங்கு கடந்த 5ம்தேதி இறந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் குரங்கினை குளிப்பாட்டி மாலை அணிவித்து, மனித மரணத்திற்கு செய்யும் சடங்குகளை செய்து ஊர்வலமாக எடுத்து வந்து அடக்கம் செய்தனர். கிராம மக்களின் இந்த செயல் காட்டுமன்னார்கோவில் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.