கோயில் விழாவில் கோஷ்டி மோதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 3: கிருஷ்ணகிரி அருகே பறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன்(19). கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் இவர், கடந்த 1ம் தேதி தண்டேகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் விழாவிற்கு சென்றிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி அரசு கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் 18 வயது மாணவர் மற்றும் ஆட்டோ டிரைவரான சக்திவேல்(26) ஆகியோரும் கோயில் விழாவிற்கு சென்றிருந்தனர். அங்கு சின்னப்பையன் மற்றும் கல்லூரி மாணவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், கோஷ்டி மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், படுகாயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சின்னப்பையன் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து சக்திவேல்(26), ராஜேஷ்குமார்(23), பிரபு(29), ஜெயராஜ்(19), சக்திவேல்(19), அப்பு(எ) ரவிச்சந்திரன்(22) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், எதிர்தரப்பு கொடுத்த புகாரின்பேரில், சின்னப்பையன், சுரேஷ்குமார் உள்பட 29 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: