பரமக்குடி, மே 27: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தில் பனை ஓலை, நுங்கு, பனை மட்டை, பனங்கிழங்கு என அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமர தொழிலை நம்பி மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பரமக்குடியில் தனியார் மகாலில் பனையோலை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, கைவினை பொருட்கள் தென்மண்டல மண்டல இயக்குனர் பிரபாகரன், பயிற்சி உதவி இயக்குனர் ரூப் சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலையில் தயார் செய்யப்படும் கொட்டான், பழக்கூடை, அரிசிக்கூடை, பனை விசிறி, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பனை தொப்பி, பனை பாய் என ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அமைப்பு நிறுவனர் கல்யாணி செய்திருந்தார்.