விருத்தாசலம், மே 26: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுக கவுன்சிலர் செல்லத்துரையும், ஒன்றிய குழு துணை தலைவராக பாமக கவுன்சிலர் பூங்கோதையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றிய குழு தலைவராக இருந்த செல்லதுரை அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிய குழு துணைத் தலைவர் உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து மனு அளித்தனர். ஒன்றிய குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு, மார்ச் 5ம் தேதி விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டத்தை கோட்டாட்சியர் கூட்டி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தினார். இதில் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி 16 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது.