ஊராட்சி தலைவர் கார் மோதி 2 பேர் படுகாயம் தலைவருக்கு அடி, உதை: கார் கண்ணாடி உடைப்பு

திண்டிவனம், மே 25: ஊராட்சி தலைவர் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அய்யனார் மகன் ராஜாங்கம்(50). ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெரும்பாக்கம் கூட்டுபாதையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் ஏரிக்கரை வளைவில் திரும்பும்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது கார் மோதியது.

இதில் அங்கு நின்றிருந்த பெரும்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(38), சுப்பிரமணி மகன் கார்த்திக்(32) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்ததுடன், ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர், காயமடைந்தவர்கள் வெவ்வெறு தரப்பினர் என்பதால் மேலும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகாமல் இருக்க போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: