கோவை, மே 24: கோவை சேரன்நகரில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 400 குடிநீர் இணைப்புத்தாரர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மேல்நிலை தொட்டியில் உள்ள தண்ணீர், நல்ல தரத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தற்போதுள்ள விநியோக வரிசையில் உள்ள அனைத்து வால்வுகளும் மின்காந்த வால்வுகளாக மாற்றப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் மூலம் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும். நீர் விநியோகத்தில் அழுத்தம் மற்றும் ஓட்டம் தொடர்ந்து அளவிடப்பட்டு குறிப்பிடப்பட்ட குடிநீரின் அளவு கிடைத்தவுடன் வால்வுகள் தானாகவே மூடப்படும். கூடுதலாக, குளோரின், நீரின் அழுத்தம் போன்ற நீரின் தர அளவுகள், தலைமை நீரேற்ற நிலையத்தில் இருந்து இறுதி பயனாளி வரைஅளவிடப்படும்.