24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் 1000 குடிநீர் இணைப்புத்தாரர்கள் பைலட் திட்டத்தில் விரைவில் இணைப்பு

கோவை, மே 24: கோவை சேரன்நகரில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 400 குடிநீர் இணைப்புத்தாரர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மேல்நிலை தொட்டியில் உள்ள தண்ணீர், நல்ல தரத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தற்போதுள்ள விநியோக வரிசையில் உள்ள அனைத்து வால்வுகளும் மின்காந்த வால்வுகளாக மாற்றப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் மூலம் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும். நீர் விநியோகத்தில் அழுத்தம் மற்றும் ஓட்டம் தொடர்ந்து அளவிடப்பட்டு குறிப்பிடப்பட்ட குடிநீரின் அளவு கிடைத்தவுடன் வால்வுகள் தானாகவே மூடப்படும். கூடுதலாக, குளோரின், நீரின் அழுத்தம் போன்ற நீரின் தர அளவுகள், தலைமை நீரேற்ற நிலையத்தில் இருந்து இறுதி பயனாளி வரைஅளவிடப்படும்.

இந்த அளவுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக நீர் வழங்கல் பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். விரயத்தை குறைப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில்முழு பிராந்தியத்திற்கும் சமமாக விநியோகிக்க ஸ்மார்ட் விநியோக முறையை செயல்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இந்நிலையில் இத்திட்டத்தில் மேலும் 1000 குடிநீர் இணைப்புத்தாரர்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்டமாக பைலட் திட்டம் சேரன்நகரில் ரூ.2.05 கோடி மதிப்பில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் 400 குடிநீர் இணைப்பு தாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் 1000 குடிநீர் இணைப்பு தாரர்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளனர்’’ என்றார்.

Related Stories: