கொள்ளிடம், மே 14: கொள்ளிடம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் கொக்கு ஒன்று செத்து மிதந்தது. இது குடிநீரில் கலந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு மெயின் ரோட்டையொட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை குழாய் மூலம் நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் மேலேற்றி தொட்டியில் தேக்கி அங்கிருந்து கிராமத்தின் தெருக்களில் உள்ள பொது குழாய்கள் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பூர் கிராமத்தில் மிகவும் முக்கியமான குடிநீர் தொட்டி இருந்து வருகிறது.தினந்தோறும் பெரம்பூர் கிராமத்திலுள்ள மக்கள் இந்த பொதுதெரு குழாய் வழியே வரும் குடிநீரைப் பிடித்து குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நேற்று வழக்கம்போல குடிநீர் குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது குழாய் வழியே தண்ணீருடன் சேர்ந்து பல புழுக்களும் வந்து விழுந்தன.