கடலூர், ஏப். 21: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் ஜனவரி 2023ல் தொடங்கும் 8ம் வகுப்புக்கான சேர்க்கைக்கு தகுதி தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் வரும் ஜூன் 6ம் தேதி நடைபெற உள்ளது. 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது படித்துக் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். 2.1.2010க்கும் 1.7.2011க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பம், விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்று கொள்ளலாம். விலாசம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதி இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலக முகவரிக்கு தனி நபர் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.