போச்சம்பள்ளி, ஏப்.13: போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில் அரசு ஆரம்ப சுகதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், தினசரி பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. ஆனாலும் அந்த அறையில் இருந்த கட்டில், யூபிஎஸ், பழைய ரிக்கார்டுகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த தகவல் அறிந்த பர்கூர் மதியழகன் எம்எல்ஏ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.