நீடாமங்கலம், மார்ச் 31: நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி தெற்கு பள்ளி வளாகத்தில் ஆபத்தாக இடிந்து விழும் நிலையில் உள்ள குடி நீர் மேல் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி தெற்கு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. வெடிப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் கசிந்து கொண்டுள்ளது. தூண்கள் மற்றும் தொட்டியின் அடிப்பகுதியில் சிமெண்ட் காரைகள் விழுந்து கம்பிகள் தெரிகிறது. இந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து எப்பொழுது கீழே விழும் என்ற ஆபத்தான நிலை உள்ளது. இந்த இடத்தின் கீழ்தான் ஆபத்து தெரியாமல் பள்ளியின் மாணவ,மாணவிகள் விளையாடி வருகின்றனர்.