விழுப்புரம், மார்ச் 4: விழுப்புரம் நகரில் பல்வேறு பகுதிகளில் பந்தயப் புறாக்கள் வளர்ப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கென விழுப்புரம் பந்தய புறாக்கள் வளர்ப்போர் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் பந்தயப் புறாக்கள் வளர்ப்போர் சங்கம் சார்பில் 500 கிலோ மீட்டர் முதல் 800 கி.மீ. வரை பறக்கும் பந்தயப் புறா போட்டி நடந்தது. 500 கிலோ மீட்டர் பந்தயப் புறா போட்டி ஆந்திர மாநிலம் வன பாரதி தாலுகா கொட்ட கொட்ட கிராமத்தில் காலை ஏழு மணிக்கு விழுப்புரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பந்தய புறாக்களை வானத்தில் பறக்க விட்டனர் புறாக்கள் அன்று மாலை ஆறு மணிக்கு விழுப்புரம் நகருக்கு வந்து சேர்ந்தது. குறிப்பாக விழுப்புரம் கமலா நகரை சேர்ந்த சேட்டு என்கின்ற ரகுமான் சேட் என்ற நபரின் பந்தய புறா முதலிடத்தை பெற்றது. போட்டி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நிர்மல் சிட்டியில் இருந்து விழுப்புரம் பந்தயப் புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டது. புறாக்கள் 3 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் வந்தடைந்தது. இதில் விழுப்புரம் சண்முகபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் வளர்த்த புறா முதலில் வந்தடைந்தது. 800 கிலோமீட்டர் மற்றும் 500 கிலோமீட்டர் பறந்து வந்து முதலிடம் பெற்ற பந்தயப் புறாக்களின் உரிமையாளர்களான சிவக்குமார் மற்றும் சேட்டு(எ) ரகுமான் சேட் ஆகியோர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முருகானந்தம், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரகமத் சேட், சட்ட ஆலோசகர் முகமது யாசர்அராபத் ஆகியோர் செய்திருந்தனர்.