பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தில் பயன்பெற அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்யேராசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறியிருப்பதாவது: பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்’ என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும் முட்டை சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், கோழித்தீவனம் தவிர பிற உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும், நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்திற்கு 2021-2022ம் ஆண்டிற்கு, தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே முட்டை சார்ந்த பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்குதலுக்கு 106 எண்ணிக்கைகள் இலக்கு பெறப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8870757380 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: