திருப்பூர், ஜன. 22: காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தூர் பேரூராட்சி, வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் நகராட்சி பகுதிகளில் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். இதற்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பதவியேற்ற சில மாதத்தில் ஏராளமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். அந்த வகையில் தற்போது முத்தூர் பேரூராட்சி மாதவராஜபுரம் மற்றும் ஸ்ரீராம்நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, வாரச்சந்தை வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்துதல் பணி, பெருமாள்புதூர் கிழக்கு பகுதியில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்யப்பட்ட பணி மற்றும் மகாலட்சுமிநகரில் ரூ.35 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.