குறிஞ்சிப்பாடி, ஜன. 21: வள்ளலார் சித்தி அடைந்த, மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமான மருதூர், தண்ணீரில் விளக்கு ஏற்றிய இடமான கருங்குழி, அணையா அடுப்பு தர்ம சாலை மற்றும் சத்திய ஞானசபை உள்ள வடலூர், வள்ளலார் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசப் பெருவிழா தொடங்கியது. இதையடுத்து, 18ம் தேதி 6 மணி, 10, மதியம் 1, இரவு 7, 10 மற்றும் 19ம் தேதி 6 மணி ஆகிய ஆறு காலங்களில், 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதை அடுத்து, வள்ளலார் எழுதிய திருவருட்பா, வள்ளலார் புகைப்படம் ஆகியவைஅடங்கிய பேழை ஒன்று வடலூர் சபையிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி அடைந்த, சித்தி வளாகத்தில் திரு அறை தரிசனம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, வழிபட்டனர்.