கடலூர் அருகே பரபரப்பு கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள்

கடலூர், ஜன.11: கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்மப்பொருள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் அருகே உள்ள ராசாபேட்டை கடல் பகுதியில் 8 நாட்டிகல் மைல் தூரத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 5 அடி நீளமுள்ள பைபரால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள், அந்த மிதவையை படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் துறைமுக போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கப்பல் செல்ல வழிகாட்டியாக பயன்படும் உருளையாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த மிதவை குறித்து உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த உருளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: