பழநி, டிச.25: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூசம் விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்விழா ஜன.12ம் தேதி துவங்குகிறது. எனினும், தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் வேண்டி நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கையம்மன் கோயிலில் திசா ஹோமம் நடந்தது கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி நடந்தது.