ஏரல், டிச. 18: மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் பாசன மடை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் உள்ள நெல் குடோன் அருகே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் சிறிய பாசன மடை வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த வழியாக ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி, பெருங்குளம் வழியாக வைகுண்டம், திருநெல்வேலிக்கும், ஏரலில் இருந்து இவ்வழியாக சாயர்புரம், தூத்துக்குடிக்கு அதிக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் மங்கலகுறிச்சி இருந்து பெருங்குளம் செல்லும் சாலையின் இருப்பக்கத்திலும் விவசாய நிலங்களாக இருப்பதால் விவசாயிகளும் அதிகளவு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.