ஓசூர், டிச.16: ஓசூர் ஒன்றியம் பெலத்தூர் ஊராட்சியில் ₹86.50 லட்சம் மதிப்பில் ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும், ₹3 கோடியே 14.40 லட்சம் மதிப்பில் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் என ₹4 கோடியே 90 ஆயிரம் மதிப்பிலான பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ ராஜேஸ்வரி, எம்எல்ஏக்கள் ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், பர்கூர் மதியழகன் முன்னிலை வகித்தனர். ஓசூர் ஒன்றியம், பெலத்தூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கும், தளி ஒன்றியங்களை சேர்ந்த 30 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகளையும், மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 12 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.