மார்த்தாண்டம், டிச. 9:கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளதால், விமான நிலையம், மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர் மழையால் சாலை மேலும் சேதமாகியுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடந்த 6ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், மறியல் போராட்டத்தை காங்கிரசார் மாற்றி வைத்தனர். அதன்படி நேற்று காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் சிஎஸ்ஐ சர்ச் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைமையில் காங்கிரசார் குவிந்தனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.