பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து கணவன் பலி, 9 மாத கர்ப்பிணி மனைவி படுகாயம்

விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவியான 9 மாத கர்ப்பிணி படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (41). இவர் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது விழுப்புரம் ஜானகிபுரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னதாக பைக்கில் சென்ற ஒறையூர் காளி கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (37), அவரது மனைவி ஆஷா (34) ஆகியோர் மீது மோதியது. இதில் பாலமுருகன் நிலைத்தடுமாறி கீழே விழுந்த போது லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆஷா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவர் மீதும் லாரி மோதியதில் இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை துரத்தி சென்று அரசூர் அருகே மடக்கி பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விழுப்புரம் தாலுகா போலீசார், லாரி ஓட்டுனர் குமரேசனை கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விபத்தில் பலியான பாலமுருகன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: