விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவியான 9 மாத கர்ப்பிணி படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (41). இவர் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது விழுப்புரம் ஜானகிபுரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னதாக பைக்கில் சென்ற ஒறையூர் காளி கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (37), அவரது மனைவி ஆஷா (34) ஆகியோர் மீது மோதியது. இதில் பாலமுருகன் நிலைத்தடுமாறி கீழே விழுந்த போது லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆஷா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவர் மீதும் லாரி மோதியதில் இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.