ஊத்துக்குளி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

திருப்பூர், ஏப்.17: ஊத்துக்குளி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை ஊர்பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை மர்ம ஆசாமி ஒருவர் கோவில் உண்டியல் உடைப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து ஊத்துக்குளி போலீசுக்கு தகவல் தெரிவித்த அவர்கள் மர்ம ஆசாமியை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் சென்னிமலை சிறுகளஞ்சி, காளிபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் வேலுசாமி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பின்னர் அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: