வத்திராயிருப்பு, ஏப். 16: கொரோனா 2வது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. வத்திராயிருப்பு பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க விழிப்பணர்வு பிரசாரம் செய்யாத நிலையில் 4 நாட்களுக்கு முன் திடீரென கடைகளில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் கடைக்காரர்களுக்கும், வருவாய்த்துறையினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கொரோனா அபராதம் விதிக்க வருவாய்த்துறையினர் வெளியே சென்று விடுவதால் வத்திராயிருப்பு பேரூராட்சியில் வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் முன்பு உள்ள இ சேவை மையத்தில் ஆதார் கார்டு புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்யவும், முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் செய்வதற்கும் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம், கூட்டமாக காத்திருக்கின்றனர்.