நெல்லை, ஏப்.14: தமிழகம் முழுவதும் ஏப்.17,18ம் தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. நெல்லையில் 1,581 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் வேளாண்மைத்துறையில் 365 வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) பணியிடங்களும், 116 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களும், தோட்டக்கலைத் துறையில் 28 உதவி இயக்குநர் பணியிடங்களும், 169 தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களும், 307 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களும் என 985 காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான தேர்வு ஏப்.17ம்தேதி முற்பகல், பிற்பகலும், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) பதவிக்கான தேர்வு 18ம்தேதி முற்பகல், பிற்பகலும் நடக்கிறது. தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான தேர்வு 18ம்தேதி முற்பகல், பிற்பகலும், தோட்டக்கலை உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு 18ம்தேதி பிற்பகல், 19ம்தேதி முற்பகல் மட்டும் தேர்வு நடத்துகிறது. நெல்லை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளை 1581 பேர் எழுதுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சீதபற்பநல்லூர் ஜன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கலை, அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. தேர்வை கண்காணிப்பதற்கு தாசில்தார், துணை தாசில்தார் நிலைகளில் நான்கு சுற்றுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், தேர்வு மையத்திற்கு கூடுதல் பஸ் இயக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.