தென்காசி, ஏப். 13: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தென்காசியில் அதிகாரிகளுடன் கலெக்டர் சமீரன் ஆலோசனை நடத்தினார். தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன், தென்காசி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமை வகித்தனர். இதில் அனுஜார்ஜ் பேசுகையில் ‘‘கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். கடைகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு பதாகையை வைக்க வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறையுடன் இணைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.