ஈரோடு, ஏப். 9: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியும், கோபி, பவானிசாகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் துணை ராணுவம், சிறப்பு காவல் படையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் தீ மற்றும் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு 38 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.