மதுரை, ஏப்.9: அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து மதுரை மாநகர் அதிமுக பகுதிச்செயலாளர் பதவி விலகியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவில் 100 வார்டுகள் உள்ளன. இதில் பழைய 72 வார்டுகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட செயலாளராக உள்ளார். 8 வார்டுகளுக்கு ஒரு பகுதிச்செயலாளர் என நியமிக்கப்பட்டனர். அந்த பகுதி செயலாளர் கீழ் 8 வார்டுகளின் செயலாளர்கள் பணியாற்ற வேண்டும். இதனால் அதிக அதிகாரம் படைத்ததாக பகுதிச் செயலாளர் பதவி இருந்தது. இந்நிலையில் ஒரு சில பகுதிச் செயலாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவை மீறி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளராக மாறினர். இதனால் கட்சி பணியில் செல்லூர் ராஜூவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே தேர்தல் பணிக்காக அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த மாதம் தற்போதுள்ள பகுதிச்செயலாளர்களை புறக்கணித்துவிட்டு, 2 வார்டுக்கு ஒரு பகுதிச்செயலாளர் என தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தார்.