நத்தம், ஏப். 8: நத்தத்தில் மதுரை சாலையோரம் உள்ள மணல் குவியலால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். நத்தம் பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலை உள்ளது. இந்த தார் சாலை சந்தை வளாகத்தில் இருந்து கோயில் செல்லும் வரையிலும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், காலையில் காய்கறி கமிஷன் கடைகள் நடைபெறும் பகுதிகள் என இச்சாலை மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும். மேலும் இந்த சாலை வழியாக நத்தம்- மதுரை போக்குவரத்து வாகனங்களும் அதிகம் வந்து செல்கிறது. இந்நிலையில் தார்ச்சாலையின் இருபுறமும் மணல்கள் நிரம்பி காணப்படுகிறது. இதில் ஒரு வாகனம் மற்றொரு வாகனம் முந்தி செல்வதற்கு வழிவிடுவதிலும், முன்னால் செல்லும் வாகனத்தை பின்னால் செல்லும் வாகனம் கடந்து செல்ல முடியாத அளவிற்கு இடையூறாக இந்த மண் குவியல்கள் உள்ளது. அப்படியே சென்றால் டூவீலரில் செல்பவர்கள் மணல்கள் வாரி வாகனங்களில் கீழே விழும் நிலை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த இடத்தில் பயணியர் விடுதியையொட்டி அபாய வளைவும் உள்ளது. இதுவும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.