நத்தம், ஏப். 5: நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இரட்டை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது கட்சியினர், கிராமத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இறுதி நாளான நேற்று காலையில் கோபால்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் பேசி மாலையில் நத்தம் பஸ்நிலைய பகுதியில் நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது. நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் அமைச்சராக இருந்தபோதும் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன். நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்புடையவனாக உள்ளேன். என்னை பொறுத்தவரை தொகுதி வளர்ச்சிதான் முக்கியம். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது மீண்டும் 5வது முறையாக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.