பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு எம்பி வாக்கு கேட்டு பிரசாரம் அரசு கல்லூரி நகருக்குள் கொண்டு வரப்படும் என உறுதி

பேராவூரணி, ஏப்.5: பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து, பேராவூரணி வேதாந்தம்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதை தம் வாழ்வின் நோக்கமாக கொண்டு செயல்படுபவர். பேராவூரணி அரசு கல்லூரி நகர் பகுதியில் அமையாமல் போக்குவரத்து வசதியற்ற கிராம பகுதியில் அமைந்துள்ளதால் மாணவிகள் பல்வேறு சிரமங்கள் அடைவதாக கூறினார்கள். அந்த கல்லூரியை பேராவூரணி நகர் பகுதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

அசோக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து பாஜக, அதிமுக முகத்தில் நீங்கள் கரியை பூசவேண்டும் என்றார். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் பண்ணவயல் ராஜாத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக செயலாளர்கள் முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், பேராவூரணி தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் ராஜேஷ், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: