வீரவநல்லூர், ஏப்.3: அம்பை தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் நேற்று பத்தமடை பஸ் நிறுத்தத்தில் பிரசாரத்தை துவங்கினார். அவருக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் பேரூராட்சிக்குட்பட்ட தங்கம்மன் கோயில் பகுதி, அக்ரஹாரம் தெரு, விஸ்வகர்மா சமுதாயத்தினர் பகுதி, கரிசூழ்ந்தமங்கலம், நடுவூர், கான்சாபுரம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட 18 வார்டுகளுக்கும் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மதியம் தவ்ஹித் ஜமாத் பள்ளிவாசல் பகுதிக்கு சென்ற ஆவுடையப்பன் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பெரிய பள்ளிவாசலான மலுக்காமலியார் பள்ளிவாசலுக்கு சென்ற ஆவுடையப்பனுக்கு ஜமாத்தார்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆவுடையப்பனுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமீமுன் அன்சாரி திரளான இஸ்லாமியர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழகத்தையும், தமிழக மக்களையும் வடமாநிலத்தவர்களிடம் அடகு வைத்த அதிமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றார்.