திருவாரூர், ஏப்.2: பாதாள சாக்கடை திட்டமானது 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் ரூ.50 கோடியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த திட்டமானது உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டென்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை உள்ளது.