அறந்தாங்கி, மார்ச் 26: மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாட்டில் படிக்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என்று ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து பிரசார கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசினார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலத்தில் திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார் . திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் பேசியதாவது: மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 176 நாட்கள் நடந்த போராட்டத்தில் 46 நாட்கள் இரவு பகலாக போராட்டக்காரர்களோடு இருந்து போராடியவர் மெய்யநாதன். அதேபோல் கஜா புயல் பாதிப்பின் போது புயல் தாக்கிய மூன்றாவது நாளே ஸ்டாலினை அழைத்து வந்து பாதித்த பகுதிகளை பார்வையிட வைத்து பல்வேறு உதவிகளை வழங்கியவர். பொதுமக்களிடம் ஸ்டாலின் வாங்கிய லட்சக்கணக்கான மனுக்களுக்கு அவர் பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இதற்காக தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைக்க உள்ளார்.