திண்டுக்கல், மார்ச் 23: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் நேற்று கொரோனா தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சியாம் வேதமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் கூறியதாவது: இந்த மார்ச் மாத ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் கொரோனா தொற்று சம்பந்தமாக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்படாமல் அலட்சியமாக இருப்பதே. தமிழக அரசு வலியுறுத்தி வரும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளி யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.