திண்டுக்கல், மார்ச் 23: சட்டமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய இடங்களை முழுமையாக கண்காணிக்க தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முழு வீச்சில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. போலீசார், தேர்தல் பிரிவு வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே போலீசார் சார்பில் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்னைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன் வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைக்குரிய கிராமங்கள், நபர்கள், ரவுடிகள் லிஸ்ட் சேகரிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்னைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.