கோவில்பட்டி, மார்ச் 21: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று மேற்கு ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். தங்கப்பன் நகர், லாயல் மில் காலனி, பூரணம்மாள் காலனி, சண்முகாநகர், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோவில்பட்டி தொகுதிக்கு எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். ரூ.8 கோடி மதிப்பில் கோவில்பட்டியில் புதிய அரசு கலைக்கல்லூரி, ரூ.3 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ரூ.7 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், எட்டயபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க ஏற்பாடு செய்வேன். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.