மேட்டூர்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று பிற்பகலில் கொள்ளேகால் வந்தடைந்தது. இரவில் தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இந்த உபரிநீர், ஒகேனக்கல் வழியாக இன்று மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 68 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக விநாடிக்கு 1500 கனஅடி திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 73.18 அடியாகவும், நீர்இருப்பு 35.49 டிஎம்சியாகவும் இருந்தது.
