ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த மக்கள், தாய் வீட்டு சீதனமாக மங்கள பொருட்கள் கொண்டுவந்து பவானி அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயிலில்ஆடித்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
ஆடி 3வது வாரம் ஞாயிற்றுக்கிழமையான நேற்றிரவு பெரியபாளையம் அம்பேத்கர் நகர், தண்டுமா நகர், ராள்ளபாடி மற்றும் அரியப்பாக்கம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,பவானி அம்மனை பல்வேறு உருவங்களில் சிலையாக வடிவமைத்து டிராக்டரில் வைத்து பேண்டு, வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது 4 கிராமங்களை சேர்ந்த மக்களும் தாய் வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், புடவை, வளையல் மற்றும் பொங்கல் பானை ஆகியவற்றுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இதன்பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல்வைத்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த 4 கிராம மக்களுக்காக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டு தரிசனமும் நடைபெற்றது.
