கிருஷ்ணகிரி, ஆக.3: காவேரிப்பட்டணம் அருகே, ஜாதி பெயரை கூறி அதிகாரியை திட்டியவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், மிட்டள்ளி பஞ்சாயத்து கதிரிபுரம் கிராமத்தில், குடிநீர் சரியாக வீட்டிற்கு வருவதில்லை என்று, கிராம மக்கள் பிரதம மந்திரிக்கு அனுப்பிய புகாரின் பேரில், நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருத்திகா, பஞ்சாயத்து செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர், கதிரிபுரம் கிராமத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குமார் என்பவரது வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் வருகிறதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஒழுங்காக வருவதில்லை என்று பதிலளித்துள்ளனர். இதையடுத்து, அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று கழிப்பறையை பார்வையிட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர், அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி, யார் வீட்டிற்குள் சென்று பைப் லைனை பார்த்தது? என திட்டியுள்ளனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து குமார்(45) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
