கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் மாணிக்கம் தாகூர் அவர்களே. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ஒன்றிய பாஜ அரசு அமைத்த ஆணையம் தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டாலும் கூட, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது என்பது ஊரறிந்த விஷயம்.

இதில் ஒன்றிய பாஜ அரசின் மீது நீங்கள் பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல். எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூறிய பிறகும் கூட தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் இழுத்தடித்த உங்கள் கர்நாடக காங்கிரசை முடிந்தால் கேள்வி கேளுங்கள். தமிழக முதல்வரை சந்திக்க வருமாறு கூறிவிட்டு, பின்பு சாக்குபோக்கு சொல்லி கதவை சாற்றி, அவமானப்படுத்தியது ஏன் என உங்கள் கட்சியின் கர்நாடக முதல்வருக்கு முடிந்தால் கண்டனம் தெரிவியுங்கள்.

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் உங்கள் சொந்த அரசிடம், அத்திட்டத்தை கைவிடுமாறு முடிந்தால் எடுத்துக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் வேண்டாம். தமிழகத்திற்கு வந்த உங்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தற்போது தமிழகத்தில் பற்றி எரியும் காவிரி நீர் பிரச்னை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்றதில் இருந்தே தெரிகிறது, காங்கிரஸ்காரர்களுக்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை.

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காவிரி நீர் பிரச்னை மட்டுமா, கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்கிரஸ். எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜ என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது.

Related Stories: